ஹைதராபாத்:லோக்சபாவுக்கு, 2024ல் நடக்க உள்ள தேர்தலை சந்திக்கும் வகையில், மக்களை நேரில் சந்திக்கும் இரண்டு புதிய பிரசார திட்டங்களை பா.ஜ., அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் ஹைதராபாதில், பா.ஜ.,வின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் துவங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் நட்டா உட்பட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக நேற்று காலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் விவாதிக்கப்பட்டது குறித்து, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், கட்சியின் துணைத் தலைவருமான வசுந்தரா ராஜே கூறியதாவது :வரும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், இந்த செயற்குழுவில் பல முடிவுகள் எடுக்கப்படும். இதில் அரசியல் தொடர்பான ஒரு தீர்மானமும், பொருளாதாரம் மற்றும் மக்கள் நலன் தொடர்பான ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.
இதைத் தவிர தெலுங்கானாவில் கட்சியின் நிலைமை குறித்தும், அடுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை வெளியிடப்படும்.நாட்டில் தற்போதுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப் படும்.முன்னதாக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
வீடு தோறும் தேசியக் கொடி என்ற பிரமாண்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளோம். மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில், 20 கோடி மக்களை சென்றடைய உள்ளோம்.மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களால் பயனடைந்த, 30 கோடிக்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து, அரசின் செயல்பாடுகள் குறித்தும் சாதனைகள் குறித்தும் விளக்க உள்ளோம்.அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், 'பூத்' அளவில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:நாட்டில் உள்ள ஏழைகளை அதிகாரம் மிக்கவர்களாக, பா.ஜ., மாற்றுகிறது. ஆனால், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ, தங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களையும் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றுகின்றன. கடந்த எட்டு ஆண்டு களாக பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடி தலைமையின் கீழ், ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ருசித்து மகிழுங்கள்!
செயற்குழு கூட்டத்துக்காக தெலுங்கானாவின் அழகிய நகரான ஹைதராபாதுக்கு சுற்றுலா வரும் பா.ஜ.,வினரை வரவேற்கிறோம். பிரபலமான ஹைதராபாத் பிரியாணி மற்றும் டீயை ருசித்து பார்த்து மகிழுங்கள்.
ராமா ராவ்
தெலுங்கானா அமைச்சர், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.ஹைதராபாதுக்கு நேற்று வந்த பிரதமர் நரேந்திர மோடியை, விமான நிலையத்தில் வரவேற்க சந்திரசேகர ராவ் செல்லவில்லை. கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக இவ்வாறு பிரதமரை வரவேற்பதை அவர் தவிர்த்துள்ளார்.
மாநில அரசின் சார்பில் கால்நடைத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர்கள் சென்றனர்.அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வந்தபோது, விமான நிலையத்துக்கு சென்று சந்திரசேகர ராவ் வரவேற்றார்.
முதல்வரின் நடவடிக்கைக்கு மாநில பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ''முதல்வர் சந்திரசேகர ராவ், மோடி என்ற தனிப்பட்ட நபரை அவமதிப்பதாக கருதி, நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தையே அவமதித்துள்ளார்,'' என்றார்.
ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும், 'அக்னிபத்' திட்டம் மற்றும் அடுத்த 18 மாதங்களில், 10 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்பும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து, பா.ஜ., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வழிமொழிந்தனர்.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:கொரோனா காலத்திலும் மத்திய பட்ஜெட்டில் மூலதன முதலீடுகளுக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது, வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சியாகும். வேலை வாய்ப்பின்மை பிரச்னை தீவிரமாக இருந்தால், சமூக நல்லிணக்க பிரச்னை ஏற்பட்டிருக்கும்.
தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது ஆகியவற்றை இந்தியாவின் பிரச்னையாக பார்க்கக் கூடாது. கொரோனாவுக்கு பிறகு உலகெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகள், உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்துள்ள போரால், பல பெரிய நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் நம்முடைய பாதிப்பை குறைப்பதற்கான முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.