புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுக., தலைமையை ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
வரும் 18 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கியுள்ளனர். இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு பழனிசாமியை தொலைபேசி மூலம் ராகுல் தொடர்பு கொண்டதாக செய்தி வெளியானது.

இதனை மறுத்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவு கேட்டு அதிமுக.,வின் பழனிசாமியை தொலைபேசியில் ராகுல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் போலியானது மற்றும் தவறானது. அப்படி எந்த தொலைபேசி அழைப்பும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது. அதனை தாங்கும் அளவுக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.