சென்னை-அன்னிய மரங்களை முழுமையாக அகற்றுவது தொடர்பாக, திட்ட அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக வனப் பகுதிகளில் உள்ள, யூகலிப்டஸ் போன்ற அன்னிய மரங்களை அகற்றக் கோரிய வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில், 3,700 ஏக்கர் பரப்பில், அன்னிய மரங்கள் பரவி உள்ளன; இவற்றை விரைவில் அகற்றாவிட்டால், நாட்டு மரங்கள் பாதிக்கப்படும்.
தனியார் நிறுவனங்கள்
அன்னிய மரங்களை அகற்ற, அரசு, 5.36 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது; தமிழ்நாடு காகித நிறுவனத்துடன் ஆலோசனை நடக்கிறது.தர்மபுரி, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஆனைமலை, முதுமலை பகுதிகளில், அன்னிய மரங்கள் அகற்றப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், 'அன்னிய மரங்களை அகற்றும் பணியை, ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்களிடம் ஏன் வழங்க கூடாது? அரசின் திட்டங்கள் காகித அளவில் தான் உள்ளன. 'வேலை வாய்ப்பு உறுதி திட்ட நிதியை பயன்படுத்த உத்தரவிட்ட பின்னும், ஏன் ஆலோசனை நடத்த வேண்டும்?' என்று கேள்விகள் எழுப்பினர்.அன்னிய மரங்களை முழுமையாக அகற்றுவது தொடர்பாகவும், எவ்வளவு பரப்பில் அகற்றப்பட உள்ளது என்பது குறித்த திட்ட அறிக்கையையும், மூன்று வாரங்களில் தாக்கல் செய்ய, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அச்சுறுத்தல்
வன விலங்குகளுக்கு, வனங்களுக்கு, அன்னிய மரங்களால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறிய நீதிபதிகள், 'டாஸ்மாக் நிர்வாகம் போல் வருமானம் தருவதாக இருந்தால் தான், வனத்துறை மீது அரசு அக்கறை காட்டுமா?' என்றும் கேள்வி எழுப்பினர். விசாரணையை, வரும் 25க்கு தள்ளி வைத்தனர்.