விதிமீறல்கள் பல துயரங்களுக்குக் காரணமாக அமைகின்றன; சாலை விதிமீறல்கள், உயிர்களையே மாய்த்துவிடுகின்றன. நாட்டில் சாலைப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டால், ஆண்டுக்கு 30 ஆயிரம் உயிர்களை விபத்தில் இருந்து பாதுகாக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு.
அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், மது குடித்துவிட்டு ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணியாமல் செல்லுதல், கார்களில் செல்வோர் 'சீட் பெல்ட்' அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல்கள், விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
தப்பியிருக்கலாம்
சமீபத்தில் அவிநாசி அருகே, பைக்கில் சென்ற பொறியியல் கல்லுாரி மாணவர் விபத்தில் பலியானார். அவர் ெஹல்மெட் அணிந்திருக்கவில்லை. பைக்கில் சக நண்பர்கள் இருவர் உடன் வந்தனர். ெஹல்மெட் அணிந்திருந்தால், விதிமுறையைப் பின்பற்றியிருந்தாலும் குறைந்தபட்ச காயங்களுடன் மாணவர் தப்பியிருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல், திருப்பூரில் நடைபெறும், பல விபத்துகளுக்கு, விதிமீறல்களே காரணமாக அமைகின்றன.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ெஹல்மெட் அணிவதை சுமையாக கருதத் தேவையில்லை. அது உயிர்க்கவசம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கார்களில் செல்பவர்கள் 'சீட் பெல்ட்' அணிவது சுலபமான விஷயம்தான். ஆனால், பலர் இதைப் பொருட்படுத்துவதில்லை.டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு, அப்படியே வாகனங்களை இயக்கும் 'குடி'மகன்கள் பலர். இது தினந்தோறும் நடைபெறும் குற்றம். பலரது கண்ணெதிரிலேயே நடைபெற்றாலும், இது தடுக்கப்படுவதில்லை.நகருக்குள், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், வேகக்கட்டுப்பாடு அவசியமானது. தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக, திருப்பூரில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான ரோடுகளில் கூட, பலர், வாகனங்களை விதிமுறைப்படி இயக்குவதில்லை.விபத்து நேரும்போது, தவறாக விதிமுறை பின்பற்றுபவர் மட்டும் பாதிக்கப்படவில்லை. விதிமுறையை முறையாக கடைபிடித்து செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர்; அப்பாவிகள் உயிரிழக்க நேர்கிறது.
குறுகலான ரோடுகள்
திருப்பூரின் ரோடுகள் பரந்து விரிந்தவை அல்ல; பரபரப்புடன் இயங்கும் மாநகரில், வாகனங்களை நிதானமாக இயக்கியாக வேண்டிய கட்டாயம், அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் உள்ளது. ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனங்களில் பறப்பவர்கள் பலர். தற்போது பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், 18 வயது நிரம்பாத மாணவர்கள் பலர், பைக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.போலீசார் அறிவுறுத்தினாலும், பள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இது தொடர்கதையாக உ ள்ளது. பெற்றோர் நினைத்தால், வாகனங்களை மாணவர்கள் எடுத்துச்செல்லாமல் தடுக்க முடியும்.கவனமின்மையால், விபத்துகள் கண நேரத்தில் நிகழ்ந்துவிடுகின்றன. ஆனால், ஒவ்வொரு விபத்துகளும், விலை மதிக்க முடியாத இழப்பை, ஏதேனும் ஒரு குடும்பத்திற்கோ, விபத்தால் பாதிக்கப்பட்டவரை சார்ந்திருப்பவர்களுக்கோ ஏற்படுத்தி விடுகின்றன.நிஜத்தைப் புரிந்தால், விதிமுறைகளை மதிக்கவும் கற்றுக்கொள்ளலாம்!