வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-நடப்பாண்டில், 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்கும் பணியை ஆக., 31க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்திஉள்ளது.
தமிழக மின் வாரியம், சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவுகளின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்குகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு இலவசம். சுயநிதி பிரிவில் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம்.மின் வாரியம், நிதி நெருக்கடியில் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இதனால், விவசாய இணைப்பு கேட்டு, 2021 மார்ச் வரை, 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.அதில், 2021 - 22ல் முதல்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டன. நடப்பு, 2022 - 23ல், 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப, மின் இணைப்பு வழங்கும் பணி, மே இறுதியில் துவங்கிய நிலையில், இதுவரை, 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 40 ஆயிரம் விவசாய இணைப்பு வழங்கும் பணிகளை ஆக., 31க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்திஉள்ளது.