விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் ரயில் முன் பாய்ந்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனுக்கு, நேற்று காலை 7:40 மணியளவில், மங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது ரயில் தண்டவாளம் அருகே நின்ற வடமாநில வாலிபர் ஒருவர், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.உடன், விருத்தாசலம் ரயில்வே போலீசார்,
வாலிபரின் உடல் அருகே கிடந்த அவரது மொபைல் போனை மீட்டு, விசாரணை நடத்தினர். அதில், அவர் ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், கர்னோஸ் பகுதியைச் சேர்ந்த குமான் மகன் கிஷன், 20, என்பது தெரிய வந்தது. மேலும், அவர் விருத்தாசலம் இரட்டை தெருவில் தங்கி, தொழுதுார் அடுத்த ஆவட்டியில் உள்ள உறவினர் ஒருவர் நகை அடகு கடையில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இவரது இடது கையில், இந்தி மொழியில் பெண் ஒருவரின் பெயர் மற்றும் ஊர் எழுதப்பட்ட ரத்த காயம் இருந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.