வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'எந்த ஒரு செயலுக்கும், லாப நோக்கம் இல்லாமல் தி.மு.க.,வால் செயல்படவே முடியாது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க.,வின் வாக்குறுதிகளை நம்பி ஓட்டளித்து விட்டு, பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ள, தமிழக மக்களின் பாதிப்புகளை பிரதிபலிக்கும் வகையில், பா.ஜ., சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை மிக மோசமாக இருக்கிறது.
காவல் நிலையத்தில் தொடரும், 'லாக்கப்' மரணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என, ஆளும் தி.மு.க.,வின் நடவடிக்கைகள், அனைவருக்கும் பெரும் துன்பத்தை கொடுத்து வருகிறது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை.

பாமர மக்களை ஏமாற்ற பசப்பு வார்த்தைகளை பேச முடியும்.செய்ய முடியாத, தங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம், வெட்டி வாய்ச்சவடால் விட்டுவிட்டு, வெறும் அறிக்கை அரசியலை மட்டும் நடத்தி கொண்டிருக்கின்றனர்.
பட்டியல் இனத்தவரின் பாதுகாவலர் என்று சொல்லி கொள்ளும் தி.மு.க., பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு பெண்மணியை நாட்டின் ஜனாதிபதியாக பா.ஜ., முன்னிறுத்தியபோது, துள்ளி குதித்து வரவேற்று இருக்க வேண்டாமா?
அதற்கு பதில், யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்கும் தி.மு.க.,விற்கு, உண்மையான கொள்கை பிடிப்பு என எதுவுமே கிடையாது. எந்த ஒரு செயலுக்கும், லாப நோக்கம் இல்லாமல் தி.மு.க.,வால் செயல்படவே முடியாது.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.