சென்னை : 'உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை, மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரி, அய்யம்பெருமாள் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை முடிக்க, 2019ல் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை, அய்யம்பெருமாள் தாக்கல் செய்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, நீதிபதிகள் கூறியதாவது:இந்த வழக்கில் 2019ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்தால் தான் சரியாகும்.
அரசு துறைகளின் செயல்பாடுகளுக்கு, அதன் செயலரே பொறுப்பாவர். உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.அடுத்த விசாரணையின் போது அதிகாரிகள் ஆஜராக வேண்டும். ஆஜராக தவறினால், 'வாரன்ட்' பிறப்பிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.விசாரணையை நாளைக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.