அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் முனுசாமி பேட்டி:
அ.ம.மு.க., தலைவர் தினகரன் இந்த கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாதவர். இந்தக் கட்சியால் பலன் அடைந்தவர்; சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். அவரெல்லாம் எங்களைப் பற்றி பேச எவ்வித தகுதியும் இல்லாதவர்.
கட்சிக்காக எதுவுமே செய்யாதவரே, நிறைய பலன்களை அடைஞ்சிருக்கார் என்றால், கட்சிக்காக எவ்வளவோ செஞ்சிருக்கிற நீங்க, 'எவ்வளவு' பலன் அடைஞ்சிருப்பீங்க?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் மற்றும் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், ஆங்காங்கே உளள மாநகராட்சி விளையாட்டு மைதானங்களில், பணியாளர்களை குடியிருக்க வைத்து உள்ளனர். இது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால், உள்ளூர் இளைஞர்கள் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
இந்த பணிகளை டெண்டர் எடுத்தவர்கள், 'கவனிப்பு' பலமாக இருந்திருக்கும்... அதனால, அதிகாரிகள் கண்டுக்காம இருக்காங்க போலிருக்கு!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி:
அ.தி.மு.க., இயக்கம் இரண்டாகப் போகிறது என்பதை எண்ணி துாக்கம் வரவில்லை; துவண்டு போகிறேன். கண்ணீரை துடைப்பதற்கு கூட முடியாத நிலை உள்ளது. எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுடன் இருந்து, அந்த இயக்கத்திற்காக தொடர்ந்து பாடுபட்டவன் நான்.
அ.தி.மு.க., மேல இவ்வளவு விசுவாசம் காட்டுற நீங்க, ஜெயலலிதாவை எதிர்த்து ஒருகாலத்துல, 'தமிழர் பூமி' என்ற தனி கட்சியை ஏன் ஆரம்பிச்சீங்க?

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை இல்லை, 100 தலைமை வந்தாலும், இனி அதன் வீழ்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. பழனிசாமியால், அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைக்க முடியாது. பழனிசாமிக்கு முதல்வர்பதவி கொடுத்தவரையே அவர் மதிக்கவில்லை. அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது, அவருடன் தற்போது உள்ளவர்களுக்கும் தெரியும்.
பழனிசாமி என்பவர், அ.தி.மு.க.,வின் எண்ணற்ற தலையாட்டி பொம்மை அமைச்சர்களில் ஒருவராக இருந்தார்... அவரை, 'லைம் லைட்'டுக்கு கொண்டு வந்ததே தங்களது சித்தி தானே!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி:
ஹிந்து சமய அறநிலையத் துறை ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. அவர்கள் சர்ச், மசூதிகளையும் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையெனில், கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அரசு இடங்களில் செயல்படும் சட்டவிரோத மத வழிபாட்டு தலங்களை அமைச்சர் சேகர்பாபு அகற்றுவாரா? அதற்கான பட்டியலை தர நான் தயார்.
சட்டவிரோத மத வழிபாட்டு தலங்கள், கோவில்களா இருந்தா அடுத்த நிமிஷமே அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்!