கரூர் அருகே, அமராவதி ஆற்றின், கிளை வாய்க்காலில் முளைத்துள்ள, ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையிலிருந்து, கரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்காக, தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போது, அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில், அமராவதி ஆற்றுப்பகுதியில் சோளம் அறுவடை நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
தற்போது, அடுத்தகட்ட சம்பா சாகுபடிக்காக பணிகள் நடப்பதால், அமராவதி அணையிலிருந்து, குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் வழியாக செல்லும், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன.
மேலும், ஆகாய தாமரை செடிகளும் வாய்க்காலில் முளைத்து, படர்ந்துள்ளன. இதனால், நீரோட்டம் தடைபட்டுள்ளது. எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் மற்றும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகளிடையே
எழுந்துள்ளது.