சேந்தமங்கலம் அடுத்த திருமலைப்பட்டி பஞ்., வீரம்பட்டி கிராமத்தில், ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் கனகராஜ், 40, என்பவர், மலை அடிவாரத்தில், அரசு குன்று புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைத்து, பல ஆண்டுகளாக கால்நடைகளை வைத்து பராமரித்து வருகிறார்.
இதுகுறித்து சிலர், சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் கொடுத்தவர்களும், மலை அடிவாரத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக புகார்கள் உள்ளன.
இந்நிலையில், நேற்று தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் ஆர்.ஐ., மணிமேகலை, வி.ஏ.ஓ., தனபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, புகாரின் பேரில் ஆய்வு செய்து, கனகராஜ் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த கனகராஜ் தரப்பினர், ராஜேந்திரன், முருகேசன், அப்பீஸ், கணபதி ஆகியோர் மலை அடிவாரத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து நாங்கள் புகார் அளித்தும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆர்.ஐ., மணிமேகலை ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார்.
நாங்கள் முதலில் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுங்கள், பின், அரசு குன்று புறம்போக்கு நிலத்தில் கொட்டகை அமைத்துள்ளதை நாங்களே அகற்றிக் கொள்கிறோம் என்று கூறி, மனுவும் கொடுத்தனர். தாசில்தார் செந்தில்குமார் மனுவை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க ஆர்.ஐ., மணிமேகலை, வி.ஏ.ஓ., தனபால் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.