வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில், 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை, நிரந்தர அவைத்தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக் குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி, வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, சண்முகம் மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, பொதுக்குழு தொடர்பாக பழனிசாமி தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் சந்திரமோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.இதனை தொடர்ந்து, இந்த உத்தரவை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், பொதுக்குழுவிற்கு தடை மற்றும் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மீதான நீதிமன்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.