கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடத்தி வருபவர்கள், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, அதிபர் கோத்தபயா ராஜபக்சே தப்பியோடினார். அவர் கடற்படை கப்பல் மற்றும் விமானம் மூலம் மாலத்தீவுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். தொடர்ந்து போராட்டக்காரர்ககளை கலைக்க ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமுற்றனர். இலங்கையில் தற்போது அசாதாரண சூழல் ஏற்பபட்டுள்ளதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டம்
இலங்கையில், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல், பெட்ரோல் வாங்க பல கி.மீ., தூரம் மக்கள் வரிசையாக காத்து கிடந்தனர். இதனையடுத்து அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக போராட்டம் நடத்தினர். பிரதமராக இருந்த மகிந்த மற்றும் அமைச்சராக இருந்த அவரது மகன் உள்ளிட்ட பலரும் பதவி விலகி தப்பியோடினர். அதிபர் கோத்தபயா மட்டும் பதவி விலக மறுத்து வந்தார். நிலைமையை சமாளிக்க புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.
அலுவலகம் சூறை
இருப்பினும், பொருளாதார நெருக்கடி தீராததால், கோத்தபயாவும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதற்காக பஸ்கள், ரயில்கள் மூலம் ஆயிரகணக்கானோர் தலைநகர் கொழும்புவில் கூடினர். அவர்கள் ஒன்று சேர்ந்து அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பாதுகாப்பு படையினர் வீசினர்.
ஆனால், அதனையும் தாண்டி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். இதனால், பாதுகாப்பு படையினரும் அவர்களிடம் சரணடைந்தனர். அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், உள்ளே சென்றனர். ஆனால், அதற்கு முன்னர் கோத்தபயா அங்கிருந்து தப்பி சென்றார். அவர் நேற்று இரவே தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கோத்தபயா எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகிவில்லை.

கோத்தபயா அங்கு இல்லாததை தொடர்ந்து போராட்டக்காரர்கள், மாளிகையில் இருந்த அதிபர் அலுவலகத்தை சூறையாடினார்.
காயம்
இதனிடையே, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதல்
அப்போது. ரஜிதா சேனரத்னா என்ற எம்.பி.,யை போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி தாக்கினர். அதில் அவர் படுகாயமடைந்தார்.