சென்னை :பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே நடந்த அடிதடி சண்டையால், பொன் விழா ஆண்டை கொண்டாடும் வேளையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகம் பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. கல் வீச்சு, வாகனங்கள் கண்ணாடி உடைப்பு, மண்டை உடைப்பு என, இரு தரப்பு ஆதரவு உறுப்பினர்கள் வன்முறையில் இறங்கியதால், எம்.ஜி.ஆர்., கட்சியின் எதிர்காலம் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுக்குழு நடத்த அனுமதி அளித்து, நேற்று காலை 9:௦௦ மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து, பொதுக்குழுவில் பங்கேற்க, பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும், சென்னை, வானகரம் சென்றனர்.
பதற்றம்


அப்போது பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டார். பன்னீர்செல்வம் தரப்பினர் வந்தால், கட்சி அலுவலகம் உள்ளே நுழைவதை தடுப்பதற்காக, பழனிசாமி ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர். அலுவலக நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது; போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். காலை 8:00 மணிக்கு பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் வரும் தகவல் வெளியானதும், அப்பகுதியில் பதற்றம் காணப்பட்டது.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரை, பழனிசாமி தரப்பினர் தாக்கினர்.
அவரை போலீசார் மீட்டு, அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் தரப்பினர் வருவதை தடுக்க, பழனிசாமி ஆதரவாளர்கள், சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்தனர்.அலுவலகம் அமைந்திருந்த ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; கடைகள் மூடப்பட்டன. பழனிசாமி தரப்பினர் குப்பை தொட்டிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி, தடுப்புகளை ஏற்படுத்தினர். பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் புறப்பட்டதும், அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். அவர்களை பழனிசாமி தரப்பினர் தடுக்க, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசினர்.கட்சி அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபம் மற்றும் அப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் கற்களை எடுத்து வீசினர். அங்கிருந்த கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன; பாட்டில்களும் வீசப்பட்டன.
இந்த மோதலில் பலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தங்கள் தலைகளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி, பழனிசாமி தரப்பினரின் கல் வீச்சை சமாளித்து முன்னேறினர். பழனிசாமி தரப்பினர், நாற்காலிகளை கேடயமாக பிடித்தபடி தாக்கினர்.


போர்க்களமானது
முதலில் பழனிசாமி தரப்பினர் கை ஓங்கியது. அவர்கள் பன்னீர்செல்வம் தரப்பினரை விரட்டிச் சென்றனர். சிறிது நேரத்தில் பன்னீர்செல்வம் வேன் அங்கு வந்தது. அப்போது, அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் கற்களை வீசியபடி முன்னேற, பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் பின்வாங்கினர்.
சிலர் உருட்டுக்கட்டைகளால், அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். அப்பகுதியே போர்க்களமானது. யார் யாரை அடிக்கின்றனர் என்பதே தெரியாத அளவுக்கு கலவர பூமியாக மாறியது. ஆதரவாளர்கள் பாதுகாப்புடன், காலை 8:44 மணிக்கு, பன்னீர்செல்வம் வேன், கட்சி அலுவலகம் வந்தது. அவரது ஆதரவாளர்கள், அலுவலக பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.அவர் வாகனம், அலுவலகம் உள்ளே சென்றது. ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். கட்சி அலுவலகம் முழுமையாக பன்னீர்செல்வம் தரப்பினர் வசம் வந்தது. அவர்கள் அங்கிருந்த பேனர்களில் இருந்த பழனிசாமி படத்தை கிழித்தெறிந்தனர். மேலும், பழனிசாமி ஆதரவு பதாகைகளை ஒன்றாக குவித்து தீ வைத்தனர்.
கட்சி அலுவலகம் உள்ளே சென்ற பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், கட்சி அலுவலகத்தின் முதல் தள பால்கனியில் நின்று, தொண்டர்களை பார்த்து கை அசைத்தனர். பின், பன்னீர்செல்வம் அ.தி.மு.க., கொடியை கையில் பிடித்து, தொண்டர்களை பார்த்து அசைத்தார்; அவர்கள் வாழ்த்தி கோஷமிட்டனர்.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலி களை உடைத்தனர்.
தடியடி


பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் உள்ளே சென்ற தகவல் அறிந்து, பழனிசாமி ஆதரவாளர்கள், வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர். அவர்களை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்கொள்ள, மீண்டும் மோதல் துவங்கியது. இதற்கிடையே போலீசாரும் அதிக அளவில் அங்கு வரவழைக்கப்பட்டனர். ஆயுதப்படை போலீசார் விரைந்து வந்து, இரு தரப்பினரையும் விரட்டி அடித்தனர். கற்கள் வீசியவர்கள் மீது தடியடி நடத்தினர்.இந்த மோதலில், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக், இளைஞரணி இணை செயலர் சுனில் உட்பட, ௩௦க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்; போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது.பழனிசாமியின் ஆதர வாளரான ஆயிரம் விளக்கு பகுதி செயலர் சந்திரசேகரன் உட்பட, 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
144 தடையுத்தரவு

பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே அடிதடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீசார், அந்த சாலை மற்றும் சுற்றியுள்ள தெருக்களில், 144 தடையுத்தரவு பிறப்பித்தனர். பின், கட்சி தலைமை அலுவலகத்திற்கு 'சீல்' வைக்க முடிவு செய்தனர். தென் சென்னை கோட்டாட்சியர் சாய்வர்த்தினி தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் போலீசார், கட்சி அலுவலகம் வந்தனர்.'சீல்' வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி அலுவலக வளாகத்தில், பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.போலீசார் அவரைவெளியேற்றினர். அவருடன் அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர். அதைத் தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகள், தலைமை அலுவலகத்தை பூட்டி, 'சீல்' வைத்தனர். புதிய பூட்டு போட்டு கதவுகளை பூட்டினர். இதனால், இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமி, பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரால் அப்பொறுப்பை, கட்சி அலுவலகத்தில் ஏற்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. இதனால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், கட்சியின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வேளையில், தலைமை அலுவலகத்தை பூட்டி, 'சீல்' வைத்த சம்பவம், அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. இதனால், எம்.ஜி.ஆர்., கட்சியின் எதிர்காலம் வீணாகி விடுமோ என்ற கவலையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அலுவலகம் உள்ளே சென்ற பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரை நீக்கி, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், பன்னீர்செல்வம் புறப்பட தயாரானார்.அப்போது, அவரது ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்று, அவரது வாகனத்தில் ஏற்றினர். ஆவணங்களுடன் பன்னீர்செல்வம் வாகனம் புறப்பட்டு சென்றது. பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த தகவல் கிடைத்ததும், தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த பன்னீர் செல்வம் ஆதர வாளர்கள், பழனி சாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மகளிர் அணி நிர்வாகிகள் சிலர், தரையில் உருண்டு பழனி சாமிக்கு எதிராக கோஷமிட்டனர்.

''அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு, பன்னீர்செல்வமும், காவல் துறையுமே முழு பொறுப்பு,'' என, அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலில் காயமடைந்தவர்கள், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார். பின், அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், சில சமூக விரோதிகள் நுழையக் கூடும் எனற செய்தி வந்தது. ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில், அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, மனு அளித்தோம். சென்னை போலீஸ் கமிஷனரிடம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பெஞ்சமின் ஆகியோர் நேரடியாக மனு அளித்தனர். ஆனால், முழுமையாக பாதுகாப்பு அளிக்கவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், அத்துமீறி நுழைந்துள்ளார். ரவுடிகளை அழைத்து வந்து, கட்சியினரை தாக்கியது வேதனைக்குரியது. எந்த தலைவராவது தங்கள் கட்சியினரை தாக்குவாரா? யாராவது தாக்கினால் தடுக்க வேண்டும்.
இவரை துணை முதல்வராக்கி, ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கொடுத்ததற்கு தகுந்த வெகுமதியை, மாவட்ட செயலர்களுக்கு அளித்துள்ளார். ரவுடிகளை அழைத்து வந்து, மீன்பாடி வண்டியில் கற்களை ஏற்றி வந்து, கட்சியினர் 4,000 பேரை தாக்கி உள்ளனர். பாதுகாப்புக்கு வந்த காவலர்கள், எங்கள் நிர்வாகிகளை தாக்கி உள்ளனர். ரவுடிகளை தடுக்கவில்லை. காவல் துறையும் சேர்ந்து, மாவட்ட செயலர்களை, நிர்வாகிகளை தாக்கியது, மிகவும் கொடுமையானது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது எனக் கூறி வந்தேன். அது நிரூபணமாகி உள்ளது.
எங்கள் தொண்டர்கள் அடிபட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முழு பொறுப்பு தி.மு.க., அரசும், துரோகி பன்னீர்செல்வமும் தான். ஆவணங்களை அள்ளிச் செல்ல, காவல் துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. நீதிமன்றம் வழியாக நியாயம் பெற்று, அ.தி.மு.க., அலுவலகம் மீண்டும் திறக்கப்படும். புதுப்பொலிவுடன் அ.தி.மு.க., வீறு கொண்டு நடைபோடும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
