வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பள்ளிகள், மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால், படிப்பு தானாகவே வந்து விடும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவதற்காக 805 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் இந்த வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 27) கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்களில் உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் இடம் பெறுவர். மருத்துவ குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று விழிப்புணர்வு வழங்குவர். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்களுடன் கலந்து உரையாடிய போது, மாணவர்களிடம் சாப்பிட்டீர்களா என கேட்டேன். சிலர் சாப்பிடவில்லை என்று கூறினர். மாணவர்களே, காலை உணவை தவற விடாதீர்கள்.

எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களின் முகங்களை பார்க்கும் போது தான் நலம் பெறுகிறேன். பள்ளிகள் மதிப்பெண் பெறும் கூடமாக இருக்கக் கூடாது. மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால், படிப்பு தானாகவே வந்து விடும். காலை சிற்றுண்டி திட்டத்திற்கு நேற்று தான் கையெழுத்திட்டேன். அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி இலவசமாக வழங்கபடும். இவ்வாறு அவர் பேசினார்.