சென்னை: கருணாநிதி நினைவாக சென்னை கடற்கரையில் பேனா சிலை வைப்பதாக திமுக அரசு கூறியுள்ளதை விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'அண்ணாதுரைக்கு மூக்குப்பொடி டப்பா சிலையும், எம்ஜிஆர்.,க்கு தொப்பி சிலையும், ஜெயலலிதாவுக்கு மேக்அப் பெட்டி சிலையும் கடலுக்குள் வைப்பீர்களா' என கேள்வி எழுப்பியுள்ளார்.
கொசஸ்தலை ஆறும், பக்கிங்காம் கால்வாயும் எண்ணூர் முகத்துவாரத்தில் ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக சாலைகள் அமைக்கப்பட்டு கான்கிரீட்டுகள் போடப்பட்டு வருகின்றன. இதனை ஜூலை 31க்குள் அகற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து எண்ணூர் பஜாரில் சீமான் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:

இந்தியா 110 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது. தமிழகத்திற்கு 7 லட்சம் கோடி கடன் வந்துள்ளது. இந்த கடன் சதவீத உயர்வுதான் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற, கட்டமைக்க நினைக்கின்ற வளர்ச்சி. தமிழகத்தில் 10 ஆயிரம் அரசுப் பள்ளிக்கூடம் இடியும் நிலையில், சீரமைக்க முடியாத நிலையில் உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் பணம் வாங்கி சீரமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்து அவர்களிடமே ஊதியம் பெற்றுக் கொள்ளும்படி கூறுவீர்களா?

இவ்வளவு சிக்கல் இருக்கும்போது கருணாநிதி நினைவாக 80 கோடி ரூபாய்க்கு கடலுக்குள் பேனா வைக்கிறேன் என்று கூறுவது சரியா? அப்படியெனில் அண்ணாதுரை அடிக்கடி மூக்குப்பொடி போடுவார். அதனால் கடலுக்குள் பொடி டப்பா சிலையும், எம்ஜிஆர்.,க்கு நினைவாக தொப்பி சிலையும், ஜெயலலிதா திரைப்பட துறையில் மேக்அப் பெட்டியை அதிகம் பயன்படுத்தியதால் அவரது நினைவாக மேக்அப் பெட்டி சிலையும் கடலுக்குள் வைப்பீர்களா? உங்களுக்கெல்லாம் (கருணாநிதிக்கு) சமாதி வைத்ததே அதிகம். தேவை இல்லாத ஆட்டமெல்லாம் காட்டக்கூடாது. மக்கள் காசை வீணடிக்கக்கூடாது, ஆட்சி நடத்துங்கள். இவ்வாறு அவர் கூறினார்.