மதுரை:'இஸ்ரோ'வின், 'ஆசாதி சாட்' செயற்கைக்கோள் வடிவமைப்பு பணியில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' திட்டம் சார்பில், நாடு முழுதும், 75 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 750 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள், 'ஆசாதி சாட்' எனப்படும் செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில், பிப்ரவரி முதல் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருமங்கலம் மாணவியரும், அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு, பிற, 75 பள்ளி மாணவியருடன் இணைந்து, செயற்கைக் கோளை உருவாக்கி, விண்ணில் ஏவ உள்ளனர்.
மாணவியர் குழு ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் கர்ணன், சிந்தியா கூறியதாவது: இப் போட்டியில் பங்கேற்க நாடு முழுதும் ஆன்லைனில் போட்டி நடந்தது. தமிழகம் சார்பில், சென்னை, மதுரை திருமங்கலம் பள்ளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன.மாணவியர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் சாதித்துள்ளனர். இதில் பங்கேற்றதை ஆசிரியர்கள், மாணவியருக்கு பெருமையாக கருதுகிறோம்.இவ்வாறு கூறினர்.