வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியை, கடந்த, 13ம் தேதி அதிகாலை நான்கு பேர் துாக்கிச் செல்வது போன்ற 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம், 13ம் தேதி தரைத்தளத்தில் இறந்து கிடந்தார்.மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, ஸ்ரீமதியின் பெற்றோர் புகார் தெரிவித்து, மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகும், ஸ்ரீமதியின் உடலை வாங்க மறுத்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மாணவி இறப்புக்காக, 17ம் தேதி நடந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியது. இதில், பள்ளி, போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் போது வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த, மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மற்றும் மாடிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.
நேற்று மதியம், மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது. அதில், விடுதி தரைத்தளத்தில் இருந்து மாணவியை, மூன்று பெண்கள், ஒரு ஆண் என, நான்கு பேர் துாக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. இதில், ஜூலை, 13ம் தேதி அதிகாலை, 5.24 மணி என, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வீடியோ காட்சி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.