நிலக்கோட்டை-நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி.மு.க.,விற்கு ஆதரவளித்த சுயேச்சை கவுன்சிலர் அடித்த திடீர் பல்டியால், அ.தி.மு.க., தலைவர், துணைத் தலைவர் பதவிகள் தப்பியது.இவ்ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ரெஜினா நாயகம் (அ.தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் யாகப்பன் (அ.தி.மு.க.,) முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., பஞ்சவர்ணம் வரவேற்றார். அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்ற நிலையில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.கவுன்சிலர்கள் விவாதம்: ராஜதுரை (சுயேச்சை): இருஆண்டுகளுக்கு பின் அனைத்து கவுன்சிலர்களும் இணைந்து கூட்டம் நடத்துகிறோம். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தலைவர், துணைத் தலைவர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.கணேசன் (சுயேச்சை): 11 பள்ளி கட்டடங்கள் சேதமடைந்ததாக இடிக்கப்பட்டது. அதற்கான அனுமதி இக் கூட்டத்தில் கேட்பது எந்த விதத்தில் முறையானதாகும். இதனால் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறேன் என கூறி வெளியேறினார்.லலிதா மணிகண்டன் (தி.மு.க.,): ஒன்றிய பொது நிதி இரு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அடிப்படை தேவைகள் எதையும் செய்ய முடியாததால் தலைவர், துணைத் தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறுகிறோம் என கூறி வெளிநடப்பு செய்தனர். துணைத் தலைவர் : கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் பணிகள் தேக்க நிலையில் இருந்தது. தீர்மானத்தில் கவுன்சிலர்கள் கையெழுத்து இடாததால் பணி செய்ய முடியவில்லை. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேர், தலைவர் ,துணைத்தலைவர் உட்பட ஆறு பேர் தீர்மானங்களில் கையிழுத்திட்டனர். இதை தொடர்ந்து தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை கவுன்சிலர் ராஜதுரை திடீர் பல்டி அடித்து தீர்மானங்களில் கையொப்பமிட்டார். இதனால் இருகூட்டங்கள் நடக்காத நிலையில் மூன்றாவது கூட்டமும் நடக்காமல் இருந்தால் அ.தி.மு.க., தலைவர், துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர முடியும். இதற்காகவே தி.மு.க., இருமுறை வெளிநடப்பு செய்ய கூட்டம் நடக்காத நிலை ஏற்பட்டது. அதன்படி மூன்றாவது கூட்டத்திலும் வெளிநடப்பு செய்ய, தீர்மானம் நகலில் சுயேச்சை கவுன்சிலர் கையெழுத்திட்டதால் கூட்டம் நடந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தலைவர், துணைத் தலைவர் பதவி தப்பியது.