மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து, 2.10 லட்சம் கன அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பாசன பகுதிகளுக்கு கடந்த மே, 24ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு, 3,000 கன அடி முதல் அதிகபட்சமாக, 1.20 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. பின், தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர்
வருவதால், 2.10 லட்சம் கன அடி தண்ணீர் நேற்று காவிரியாற்றில் திறக்கப்படுகிறது.
இதனால், நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 1. 65 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
டெல்டா பாசன பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக, காவிரியாற்றில், 1. 64 லட்சம் கன அடி தண்ணீரும், நான்கு கிளை வாய்க்காலில், 1,120 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலையில், 2.10 லட்சம் கன அடி தண்ணீர் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 8, 523 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 10 ஆயிரத்து, 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 2,064 கனஅடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 273 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 88.39 அடியாக
இருந்தது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம்,
வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.86 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.90 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.