சென்னை:'வங்க கடலில், நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் பெரும்பாலான மாவட்டங்களில், மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது. சென்னையில், இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் லேசான மழை பெய்யும். தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் நிலையில், வங்க கடலின் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியை ஒட்டி, நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
இது வலுவடைந்து, வங்க கடலின் வட மேற்கு மாநிலங்களில் கன மழையை பெய்ய வைக்கும். நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 20 செ.மீ., மழை பெய்துள்ளது. சின்னக்கல்லார், 19; தேவாலா, 18; மேல்பவானி, 14; சோலையாறு, 13; திருவண்ணாமலை, 9 செ.மீ., மழை பெய்துள்ளது.மன்னார் வளைகுடா மற்றும் அரபி கடலின் மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. எனவே, மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு, வரும், 9ம் தேதி வரை செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.