திருமங்கலம் : ''ஜி.எஸ்.டி., காரணமாக ரூ.100க்கு விற்ற தயிருக்கு 5 சதவீதம் வரி விதித்தால் ரூ. 105க்கு விற்க வேண்டும். ஆனால் தி.மு.க., அரசு ரூ. 120க்கு விற்கிறது.
இந்த 15 ரூபாய் கமிஷன் யாருக்கு செல்கிறது'' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கும் பா.ஜ., மாநில மகளிரணிக்கான 2வது நாள் பயிற்சி முகாமில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 மாணவர்கள் தேசிய கொடியை ஏந்தி உற்சாகமாக கொடி அசைக்கும் நிகழ்ச்சியை பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி எம்.எல்.ஏ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தனர்.வானதி பேசுகையில், ''தமிழகத்தில் 50 லட்சம் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு நடக்கிறது. சுதந்திர தினத்தை திருவிழா போல கொண்டாட வேண்டும்'' என்றார்.
எச்.ராஜா பேசியதாவது: ஸ்டண்ட் கலைஞர் கனல் கண்ணன் ஒரு கருத்து தெரிவித்து இருந்தார். மிரட்டுவதற்காக போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அவருக்கு கருத்து உரிமை கிடையாதா. அதேசமயம் சுவாமி நடராஜரை இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் வெளியிட்டவரின் வீட்டுக்கு செல்ல போலீசிற்கு பாதை தெரியவில்லையா. தி.மு.க.,வின் கைக்கூலியாக போலீஸ் இருப்பதால் தமிழகதத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.இது 'கார்ப்பரேட் அரசாங்கம்'. ரூ.35 ஆயிரம் கோடிக்கு அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்தது ஸ்டாலின் அரசாங்கம். அதானியின் கைக்கூலி அரசாக தி.மு.க., உள்ளது என்றார்.