அருப்புக்கோட்டை, : சாத்தூர் அருகே சிவந்திபட்டியில் 3 ம், குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சாத்தூர் அருகே கோல்வார்பட்டி நீர்த்தேக்கம் அருகில் சிவந்தி பட்டியில், ஊர் மக்கள் வழிபடும் கல்லின் மேற்புறத்தில், எழுத்துக்கள் இருப்பதாக ஊரைச் சேர்ந்த, கணேஷ் பாண்டியன் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர் விஜயராகவனுக்கு தகவல் கொடுத்தார்.பேராசிரியர் தலைமையில், தொல்லியல் பயிலும் மாணவர்கள் ராஜபாண்டி, சரத்ராம், மதன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்ததில்,6 உயரமும், 2 அரை அடி அகலமும் கொண்ட, ஒரு கல்லின் மேற்புறத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளரும், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை இயக்குனருமான சாந்தலிங்கம் உதவியோடு படித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது : இந்த கல்வெட்டு 13 ம், நூற்றாண்டை சேர்ந்த 3 ம் குலோத்துங்க சோழனின் 32 ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. இருஞ்சோ நாட்டில் உள்ள ஆலங்குடி குளமும், இருப்பை குடியில் உள்ள குளமும் தூர் வாரப்படாமல், பயன்பாடு இன்றி காணப்பட்டுள்ளது.
இதனை ஆலங்குடி அரையனா திச்சனான அழகிய பாண்டிய கருநிலக்குடி நாடாள்வான் என்பவரும், அவரது படை பிரிவினரான, 'அறநிலை ஒதுக்கிகள்' என்ற, அமைப்பை சேர்ந்தவர்களும், இவ்விரு குளங்களையும் தூர்வாரி, வாய்க்கால் அமைத்துள்ளனர்.இதற்காக ஊர் மக்கள் பொற்றனேரி என்ற ஊரில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை வழங்கினர் என்று கல்வெட்டு கூறுகிறது.
இருஞ்சோ நாடு என்பது தற்போதைய சாத்தூர் பகுதியையும், இருப்பை குடி என்பது இப்போதுள்ள இருக்கன்குடியினையும் குறிக்கும்.விருதுநகர் மாவட்டத்தில் சோழ அரசர்களின் கல்வெட்டுகள் திருச்சுழி, பந்தல்குடி, கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இதில் 3 ம், குலோத்துங்க சோழனின் கல்வெட்டு எங்கும் இடம் பெறவில்லை. தற்போது சிவந்திபட்டியில் தான் 3ம், குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.