வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பள்ளிபாளையம் : ''தி.மு.க., ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ள மக்களை, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நேற்று சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.
அவர் கூறியதாவது:மழையால் மேட்டூர் அணை நிரம்பி, 2 லட்சம் கன அடி உபரிநீர் வெளியேறி, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது. வருவாய் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முகாமில் உள்ளவர்களுக்கு முறையான மருத்துவ வசதி இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன், உடனடி நடவடிக்கை எடுத்து, தேவையான நிவாரணம் கொடுத்தோம்.தற்போது, ஐந்து நாட்களாக, மக்களை பற்றி அரசு கண்டு கொள்ளவில்லை. தி.மு.க., ஆட்சி மீது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
ஐந்து நாட்களாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி, பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்து, உணவு வழங்கி வருகிறார்.மேட்டூரில் இருந்து வரும் உபரி நீரை சேமிக்க, என் ஆட்சியில், இரண்டு கதவணை கட்டப்பட்டு, ஒவ்வொன்றிலும், 5 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்கும் வகையிலும், மேலும் மூன்று கதவணைகள் கட்டவும் திட்டமிடப்பட்டது.ஆட்சி மாற்றத்தால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேட்டூர் உபரி நீரை, சேலம், சங்ககிரி, ஓமலுார், இடைப்பாடி தொகுதிகளில் உள்ள வறண்ட, 100 ஏரிகளில் நிரப்ப திட்டமிடப்பட்டது. அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஆவின் பாக்கெட்டில் பால் குறைகிறது என, புகார் உள்ளது. தி.மு.க., விஞ்ஞானபூர்வ ஊழலுக்கு புகழ் பெற்றது. மக்களுக்கு விற்கக்கூடிய பாலில் கூட ஊழல் நடக்கிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடை, அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறினார்.