மதுரை:செயல் அலுவலர் நியமனத்திற்கு எதிராக, மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கில், செயல் அலுவலர் பதவிக்கு மூன்று பேரில் ஒருவர் பெயரை ஆதீனம் குறித்த காலத்திற்குள் தேர்வு செய்து, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுவை பைசல் செய்தது.
மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தாக்கல் செய்த மனு:மதுரை ஆதீனத்திற்கு சொந்தமாக அக்னீஸ்வர சுவாமி கோவிலில், செயல் அலுவலரை நியமிக்க வேண்டுமெனில் மூன்று பேரின் பெயர்களை ஆதீனத்திற்கு முறைப்படி ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பரிந்துரைக்க வேண்டும்.
அதில் ஒருவரை, ஆதீனம் தேர்வு செய்வார். இந்த நடைமுறையை பின்பற்றாமல், கோவிலுக்கு செயல் அலுவலராக கிருஷ்ணகுமாரை நியமித்து, மயிலாடுதுறை அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவிட்டார். விதிகளை பின்பற்றவில்லை.செயல் அலுவலர் நியமன உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
நீதிபதி எம்.நிர்மல்குமார் விசாரித்தார். அறநிலையத்துறை தரப்பில், 'செயல் அலுவலர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்களை ஆதீனத்திற்கு அறநிலையத்துறை கமிஷனர் பரிந்துரைத்துள்ளார். 'அதில் ஒருவரை, குறித்த காலத்திற்குள் தேர்வு செய்து, ஆதீனம் அனுப்பும் பட்சத்தில், கமிஷனர் நியமன உத்தரவு பிறப்பிப்பார்' என, தெரிவித்தது.மனுதாரர் தரப்பில், 'தேர்வு செய்து அனுப்பத் தயார்' என, தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'குறிப்பிட்ட காலவரம்பிற்குள் ஒருவர் பெயரை மனுதாரர் தேர்வு செய்து கமிஷனருக்கு பரிந்துரைக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது' என்றார்.