ராமநாதபுரம்:ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஏட்டு மனைவியை தாக்கி கொடுமைப்படுத்திய, மதுரை ஆறாவது பட்டாலியன் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். அவரை, 'சஸ்பெண்ட்' செய்து பட்டாலியன் எஸ்.பி., உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே கோடரியேந்தல் ஜெயராஜ் மகனான கனகராஜ், 33, என்பவர், 2016ல் போலீஸ் பணியில் இணைந்து, மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்தார். அப்போது ஏட்டு முருகவள்ளி, 33, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர்.
கனகராஜ் தற்போது மதுரை ஆறா-வது பட்டாலியனில் பணிபுரிகிறார். 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டில், பல லட்சம் ரூபாய் இழந்த கனகராஜ், மதுவுக்கு அடிமையாகி மனைவியை அடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன், இருவரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்தனர். தற்போது கணவரை பிரிந்து முருகவள்ளி குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார்.
ஜூலை, 30 முதல் விடுப்பில் வந்த கனகராஜ் ஆக., 2ல், மதுரை ரோட்டிலுள்ள பள்ளியில் படிக்கும் மகளை காண சென்ற போது, முருகவள்ளியை தாக்கி நகை பறித்தார். முருகவள்ளி புகாரில், கனகராஜ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதற்கிடையில், முருகவள்ளி, அவரது தந்தை தாக்கியதாக, ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் கனகராஜ் சிகிச்சை பெற்றார். அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கனகராஜை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.