ஸ்ரீவில்லிபுத்துார்:மனநலம் பாதிக்கப்பட்ட, 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன், 45. இவரது மனைவி ரேவதி, 38; இன்ஜினியரிங் பட்டதாரியான இத்தம்பதிக்கு, மனநலம் பாதிக்கப் பட்ட, 9 வயது பெண் குழந்தை இருந்தது.
கடந்த, 2018 அக்.,1ல் மகளுடன் தம்பதியர் ஸ்ரீவில்லிபுத்துார் நாகபாளையத்தில் உள்ள காத்தப்பசாமி குலதெய்வ கோவிலுக்கு வந்தனர். சுவாமி கும்பிட்ட பின், இருவரும் நீண்ட நேரம் கோவில் பின்புறம் உட்கார்ந்திருந்தனர்.சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு, கோவில் பொறுப்பாளர் காளிமுத்து அங்கு சென்று பார்த்தபோது, தங்கள் மடியில் சிறுமியை படுக்க வைத்து, வாயில் ஒரு திரவத்தை ஊற்றியுள்ளனர்.
காளிமுத்து அதனை தட்டி விட்டார். அது விஷம் என்பது தெரிய வந்தது. சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். முனீஸ்வரன், ரேவதி மீது மல்லி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.