நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில் போதையில் ஏற்பட்ட தகராறில் 'டிவி' மெக்கானிக் தங்கராஜாவை 41, பட்டாக்கத்தியால் குத்திக்கொன்ற உதயகுமாரை 24, கிராம மக்கள் கல்லால் அடித்துக் கொலை செய்தனர்.
லிங்கவாடியை சேர்ந்த தங்கராஜாவுக்கும், அப்பகுதி உதயகுமாருக்கும் நேற்று மதியம் 1:30 மணியளவில் மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற உதயகுமார், ஊர் மந்தையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே பட்டா கத்தியால் தங்கராஜாவை முகம் மற்றும் உடலில் சரமாரியாக வெட்டினார்.
படுகாயமுற்ற தங்கராஜா சம்பவ இடத்தில் பலியானார். இதைகண்ட கிராமக்கள் சிலர், உதயகுமாரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை அவர் தாக்க முயன்றார். இதனால் சிலர் அவரை கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த உதயகுமார், நத்தம் அரசு மருத்துவமனையில் இறந்தார்.
இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.இரட்டை கொலையை அடுத்து எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி., அருண் கபிலன் லிங்கவாடியில் விசாரணை மேற்கொண்டனர். பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயகுமாரை கல்லால் தாக்கிவர்களை போலீசார் தேடுகின்றனர்.