கோவை;கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக 'நமது அம்மா' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜிடம் நேற்று தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் மர்ம விபத்தில் பலியானார். இந்த சம்பவங்கள் தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டு தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்படுகிறது.
ஜெ., தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி என, 200க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 'நமது அம்மா' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ், கோவை பி.ஆர்.எஸ்., வளாக அலுவலகத்தில் ஐ.ஜி., சுதாகர் முன்னிலையில் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். அதிகாரிகள் குழுவினர், 5 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தினர்.அ.தி.மு.க.,வில், இ.பி.எஸ்.,-ஓ.பி.எஸ்., இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவாக மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, இ.பி.எஸ்., மீது குற்றம் சாட்டும் வகையில் மருது அழகுராஜ் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜ், ''கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நான் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன். சமீபத்தில் இவ்வழக்கு தொடர்பாக புலனாய்வு அறிக்கை ஒன்று, ஊடகத்தில் வெளியானது. அதில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் வலதும், இடதுமாக இருந்து வரும் சேலம் இளங்கோவனுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் சில சந்தேகங்களை எழுப்பி எனது கருத்துக்களை தெரிவித்திருந்தேன். அதனால் என்னை விசாரணைக்கு அழைத்திருக்கலாம். நானும், பூங்குன்றனும், ஜெ.,வின் நம்பிக்கைக்கு உரிய ஊழியர்கள். அந்த அடிப்படையிலும் அழைத்திருக்கலாம்,'' என்றார்.