மதுரை: தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் (டி.என்.எம்.எஸ்.சி.) மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வழங்குவது மிகவும் குறைந்துள்ளது. ட்ரிப்ஸ், ஆன்டிபயாடிக் மாத்திரைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுக்கு 4 காலாண்டுகளாக மருந்துகள் வழங்கப்படும். 2022 - 2023க்கான முதல் காலாண்டு முடிந்து 2வது காலாண்டு பாதி வரையிலும் மருந்துகள் பற்றாக்குறையாகவே உள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கு ஏற்ப மருத்துவமனைகளைப் பொறுத்தவரை ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை மருந்திற்கான தொகை மருத்துவமனையின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதற்கேற்ப மருத்துவ சேவை கழகம் மருந்துகளை தொடர்ந்து வழங்க வேண்டும். ஆயிரம் மருந்துகள் இருந்தால் 600 மருந்துகளை மருத்துவ சேவை கழகம் மூலமே வாங்க முடியும். மீதி மருந்துகளை தேவைக்கேற்ப உள்ளூர் கடைகளில் வாங்கலாம். தற்போது 600 மருந்துகளில் 300 மருந்துகள் வரையே மருத்துவ சேவை கழகம் வழங்குகிறது.
ஒரு நிறுவனத்தின் மருந்து வினியோக காலம் முடிந்தபின் அடுத்த டெண்டர் நடைமுறை முடிய 3 மாதங்களாகும். அதன்பின் நிறுவனம் மருந்துகள் வழங்க 3 மாதங்களாகும். எனவே மருத்துவ சேவை கழகம் 6மாத காலத்திற்கான மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு மருத்துவமனைகளுக்கு தடையின்றி வழங்க வேண்டும்.

சமாளிக்கின்றன
அனைத்து அரசு மருத்துவமனைகளின் வங்கி கணக்கிலும் பஞ்சமின்றி பணம் உள்ளது. ஆனால் மருந்துகள் மட்டும் கிடைக்கவில்லை. அவசரத்திற்கு என மருத்துவமனையின் இன்சூரன்ஸ் பணத்தில் உள்ளூரிலேயே மருந்துகளை வாங்கி நிர்வாகங்கள் சமாளிக்கின்றன. அதற்கும் 2 நாட்களுக்கு ஒருமுறை சேவை கழகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியுள்ளது.
இன்சூரன்ஸ் மூலம் வருவாய் ஈட்டும் பெரிய அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையை சமாளிக்க அந்த வருவாயில் மருந்துகளை வாங்கி நோயாளிகளுக்கு வழங்குகின்றனர். வருமானம் இல்லாத மருத்துவமனைகளில் இது பெரிய பிரச்னையை ஏற்படுத்துகிறது. ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய்களுக்கு மாதந்தோறும் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
ஒருவருக்கு 4 வித மாத்திரைகள் தர வேண்டும் என்றால் 2 வித மாத்திரைகளை வழங்கி சமாளிக்கின்றனர். இது நோயாளிகளின் நோயின் தீவிரத்தை இன்னும் அதிகப்படுத்தி விடும்.டெண்டர் நடைமுறையில் பிரச்னையோ, மருத்துவ சேவை கழகத்தின் மெத்தனமோ எதுவாக இருந்தாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தடையின்றி மருந்துகளை வழங்க மருத்துவ சேவை கழகத்திற்கு உத்தரவிட வேண்டும்.