சென்னை: பள்ளிக் கல்வித்துறை, அரசு முதன்மைச் செயலாளர் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக சுற்றிக்கையில் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
எல்லா பள்ளிகளிலும் மரங்கள் உள்ளன. மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பள்ளிக் கட்டட மேற்கூரையில் விழுந்து குப்பையாக சேர்ந்துள்ளது. பல பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது தெரிய வருகின்றது. மழையின்போது இக்குப்பைகள் நீரில் நனைந்து கட்டிட உறுதிக்கு ஊறு விளைப்பதாக உள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் மேற்கூரையில் உள்ள காய்ந்த இலைகள், சருகுகளை அகற்ற வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் கட்டிடத்தின் மேற்கூரையில் மழை நீர் தேங்காதவாறு உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தில் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து சுகாதாரமான சூழலில் பள்ளி செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.
பள்ளி வளாகம் புதர்கள் மற்றும் குப்பைகளின்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.பள்ளி மாணவர்களை இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு பயன்படுத்தக்கூடாது.

பள்ளி பராமரிப்பு மானியத்தினைக் கொண்டு வெளி ஆட்கள் அல்லது உள்ளூர் நபர்கள், பணியாளர்களை கொண்டு இத்தகைய தூய்மைப் பணிகளை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தை தூய்மை செய்வதற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு செய்வதற்கு, உரிய அலுவலர்களை அணுகிப் பெற்று, பள்ளியின் பராமரிப்பு பணிகளை சீர் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
நடமாடும் மருத்துவக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.