வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் அமைச்சராக பதவியேற்றவர்கள், துறை சார்பில் தங்களுக்காக கார் வாங்கக்கூடாது. தொண்டர்களை காலில் விழ வைக்கக்கூடாது. ஏழைகள் மற்றும் பொதுமக்களை அணுகும்போது, ஜாதி மதம் ரீதியாகவும், ஒர வஞ்சனையுடனும் அணுகக்கூடாது என துணை முதல்வரும், அக்கட்சியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி சார்பில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் மீது கிரிமினல் புகார் உள்ளதாகவும், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பா.ஜ., விமர்சனம் செய்து வருகிறது.
இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த அமைச்சர்களுக்கு துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

* மற்றவர்களை சந்திக்கும் போது வணக்கம் தெரிவிக்க வேண்டும்.
* பூங்கொத்து கொடுப்பது, வாங்குவதை தவிர்த்துவிட்டு புத்தகங்களை பெற வேண்டும்.
* துறை சார்பில் தங்களுக்காக கார்கள் வாங்கக்கூடாது.
* தங்களின் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் காலில் விழுவதை அமைச்சர்கள் அனுமதிக்கக்கூடாது.
* ஏழைகள் மற்றும் பிரச்னைகளை தீர்ப்பதற்காக அணுகுபவர்களை ஜாதி மத ரீதியாகவும், ஓர வஞ்சனையுடனும் அணுகக்கூடாது. அவர்களின் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* தங்களின் அமைச்சகங்கள் சார்பில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் தங்களின் பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
விமர்சனம்
இது தொடர்பாக பீஹார் மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் கூறியதாவது: கதை நன்றாக எழுதப்பட்டுள்ளது. இதனை யார் படித்து புரிந்து கொள்ள போகிறார்கள். பீஹார் நலனுக்காக எதுவும் இல்லை. தேஜஸ்வியின் உத்தரவிற்கு அமைச்சர்கள் அடிபணிய வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.