வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு வரவேற்பு அளிக்கவும், கட்சியினர் கூட்டத்தை திரட்டவும், தமிழக காங்கிரஸ் சார்பில், கோடிக்கணக்கில் நிதி வசூலிக்கப்படுகிறது.
'இந்தியா எல்லாருக்குமான நாடு' என்ற கோஷத்துடன் ராகுல், செப்., 7ல் கன்னியாகுமரியில் நடைபயணம் துவக்குகிறார். இந்த பயணத்திற்கு, 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என, பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடைபயணம், 148 நாட்களில், 3,700 கி.மீ., துாரம் கடந்து, காஷ்மீரில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நடைபயணம் செல்லும் ராகுலுக்கு வரவேற்பு அளிக்கவும், அவர் நடந்து செல்லும் போது அவருடன் செல்ல கூட்டத்தைத் திரட்டவும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ஏற்பாடுகளை செய்து வருகிறார்.திராவிட கட்சிகளின் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களை போல, நடைபயணத்திற்கும் வாகனங்களை ஏற்பாடு செய்யவும், தொண்டர்களுக்கு தங்கும் வசதி, உணவு வழங்கவும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதற்கான செலவுக்கு, கட்சியில் இருந்து பணம் தரப்படாது என்பதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வசூலிக்குமாறு, மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ராகுல் நிகழ்ச்சிக்கான செலவு நிதிக்கு தாராளமாக பணம் வழங்குமாறு, கட்சியினருக்கு மேலிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., அருள் அன்பரசு, தன் நான்கு மாத ஓய்வூதியமான 1 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.அவரைத் தொடர்ந்து, எம்.பி.,க்களில் அதிகபட்சமாக கார்த்தி சிதம்பரம் 30 லட்சம் ரூபாயும், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் 20 லட்சம் ரூபாயும், முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் 25 லட்சம் ரூபாயும் வழங்க உள்ளனர்.
மற்ற எம்.பி.,க்கள் தலா 15 லட்சம் ரூபாய் தர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரில், பணம் படைத்த ரூபி மனோகரன், அசோகன், ஊர்வசி செல்வராஜ் போன்றவர்களிடம் தலா 25 லட்சம் ரூபாயும், மற்ற எம்.எல்.ஏ.,க்களிடம் தலா 5 லட்சம் ரூபாயும் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -