புதுச்சேரி : புதுச்சேரியில், கடற்கரை துாய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகில் நேற்று காலை கடற்கரை துாய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை, சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் பூவேந்தர் யாதவ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.கவர்னர் தமிழிசை 'துாய்மை கடற்கரை - பாதுகாப்பான கடல்' விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலர் ரிச்சா ஷர்மா, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செயலர் ஸ்மிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, மத்திய அமைச்சருடன் இணைந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து கல்வித் துறை சார்பில் நடந்த ஓவியப் போட்டியில் வரையப்பட்ட ஓவியங்களைப் பார்வையிட்டனர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பள்ளி- கல்லூரி மாணவர்களின் நடைப்பயணம் மற்றும் சைக்கிள் ஊர்வலத்தை மத்திய அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கடற்கரையில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.