வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர் : ''மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் உணவு பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது,'' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தஞ்சாவூர் கிளை சார்பில், , நேற்று, தமிழக நீர்வள மேம்பாடு விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சங்க தலைவர் பரந்தாமன் தலைமை வகித்தார். செயலர் முரளி, இணை செயலர் அசோகன், பொருளாளர் வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பரந்தாமன் கூறியதாவது:தமிழகத்தில் பெய்யும் சராசரியான, 925 மி.மீ., மழையால், ஆண்டுக்கு, 2,500 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு, 1,260 டி.எம்.சி., மட்டுமே தண்ணீர் தேவை.இந்நிலையில், 100 நீர்த்தேக்கங்கள், 40 ஆயிரம் கண்மாய்கள் வாயிலாக நமக்கு, 1,058 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது.
![]()
|
தற்போது கண்மாய்கள், நீர்தேக்கங்கள் வண்டல் படிந்து, 20 சதவீதம் துார்ந்து போய் உள்ளதால், அவற்றில், 142 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டு, 916 டி.எம்.சி., தான் கிடைக்கிறது.தமிழக அரசு துார்ந்து போன நீர்த்தேக்கங்கள், கண்மாய்களை ஆழப்படுத்த வேண்டும். சரியான முறையில் நீர்தேக்கங்களை கையாண்டால், தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தன்னிறைவு மாநிலமாக விளங்கும், என கருத்துரை அனுப்பி உள்ளோம்.கர்நாடக மாநிலத்தின் எல்லையில் உள்ள மேகதாதுவுக்கு கீழே, கர்நாடகவுக்கு எந்த தண்ணீர் தேவையும் இல்லை. ஆனாலும், 67 டி.எம்.சி., அளவு தண்ணீர் தேக்கும் அளவிற்கு கொண்ட அணையை கட்ட முயற்சிக்கின்றனர்.
மேகதாதுவில் அணை கட்டினால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து மேட்டூருக்கு வரும், 67 டி.எம்.சி., தண்ணீர் வராது. அவர்கள் இஷ்டத்திற்கு தான் தண்ணீரை திறப்பர்.தமிழக அரசு, நீதிமன்றத்தையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் அணுகி, அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பை உணர்த்த வேண்டும்.தமிழகத்தில் காவிரி பாசன பரப்பில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 33 சதவீதம் காவிரி டெல்டாவில் உள்ளது.
இந்த பாசனம் நின்று போனால், தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.பாலாற்று படுகையில், ஆம்பூர் துவங்கி ராணிப்பேட்டை, வாலாஜா வரை தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலில் இருந்து வரும் ரசாயனக் கழிவுகளால் பாலாற்று படுகை பாழாகி உள்ளது. இதே போல், நொய்யல் ஆற்றுப்படுகையும் பாழ்ப்பட்டு உள்ளதால் விவசாயம் பாதிக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.