புதுடில்லி: சிறுதானியங்கள் குறித்து தொல்காப்பியம், புறநானூறு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உடல் ஆரோக்கியத்துக்கு சிறுதானியங்கள் மிகவும் முக்கியம் எனக்கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று 'மன் கி பாத்' நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இன்று (ஆக.,28) அவர் பேசியதாவது:
அமிர்த மஹோத்சவ்
சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அன்று, நாடு முழுவதும், அனைத்து நகரங்கள், கிராமங்களில் அமிர்த மஹோத்சவ் கொண்டாட்டத்தை காண முடிந்தது. நாட்டின் கூட்டு முயற்சியை நாம் பார்த்தோம். பெரிய நாட்டில், பன்முகத்தன்மை உள்ள போதும், தேசிய கொடி ஏற்றப்பட்ட போது, அனைவரும் ஒரே உற்சாகத்துடன் காணப்பட்டனர். தூய்மை பிரசாரம் மற்றும் தடுப்பூசி இயக்கத்திலும் மக்களின் உற்சாகத்தை நம்மால் பார்க்க முடிந்தது. அதேபோன்று தேசப்பற்றில், மக்களின் உற்சாகத்தை அமிர்த மஹோத்சவ்வில், மீண்டும் பார்க்க முடிந்தது.
நாட்டின் எல்லை, நடுக்கடல் மற்றும் மலை உச்சியில் நமது வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றினர். அமிர்த மஹோத்சவ்வின் உற்சாகத்தை இந்தியாவில் மட்டுமல்ல உலகின் மற்ற நாடுகளிலும் பார்க்க முடிந்தது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, போட்ஸ்வானாவை சேர்ந்த பாடகர்கள் 75 தேசப்பற்று மிக்க பாடல்களை பாடினர். இந்த பாடல்கள், ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்கம், அசாமி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பாடப்பட்டது. இந்தியா நமீபியாவின் கலாசார பாரம்பரிய உறவை பிரதிபலிக்கும் வகையில் நமீபியாவில் சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டது.
அம்ரீத் சரோவர்
தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நீரை பாதுகாப்பது குறித்து நமது கலாசாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளது. அவை இன்றைக்கும் பொருந்துவது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. தேசம் இதனை தனது பலமாக ஏற்றுக்கொள்ளும்போது அதன் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நாட்டிற்காகவும், ஒருவரின் கடமையாகவும், வருங்கால சந்ததிக்காகவும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நீர்நிலைகளை பாதுகாக்கும், புதுப்பிக்கும் அம்ரீத் சரோவர் குறித்து பேசியிருந்தேன். அதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் பல மாவட்டங்களில் அது குறித்து தீவிரம் காட்டியதுடன், பல தன்னார்வ அமைப்புகள் இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது.
எதிர்கால சந்ததியினருக்கு முக்கியம்
தெலுங்கானாவின் வாராங்கல்லில் உள்ள கிராம பஞ்சாயத்து, கர்நாடகாவின் பகல்கோட்டில் உள்ள பில்கெரூர் கிராமம், ம.பி.,யின் மண்ட்லா மாவட்டத்தில் உள்ள மோசா கிராம பஞ்சாய்த்து, உ.பி.,யின் லலித்பூரில் நிவாரி கிராம பஞ்சாயத்து போன்றவற்றில் அம்ரீத் சரோவர் பெரிய அளவில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, நீர்நிலைகள் , ஏரி, குளங்கள் பாதுகாக்கப் பட்டன. அதனை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனால், மழை பெய்த போது நீர்நிலைகள் நிரம்பின. இதனால், விவசாயிகள், மக்கள் பயனடைந்தனர். அமித் சரோவர் அபியான் இயக்கம், பல பிரச்னைகளுக்கு தீர்வை மட்டும் தருவதில்லை. எதிர்கால சந்ததியினருக்கு முக்கியமானது. அதில், இளைய தலைமுறையினர் இணைய வேண்டும். பருவமழை காலத்தில் இயற்கை அளிக்கும் கொடையான மழைநீரை பாதுகாக்க வேண்டும்.

சிறு தானியங்களுக்கான நூற்றாண்டு
சென்னையிலிருந்து ஸ்ரீதேவி வரதராஜன் என்பவர் எனக்கு ஒரு நினைவூட்டல் செய்தியை அனுப்பி உள்ளார். அவர், 'மை கவ்' இணையதளத்தில் '' புத்தாண்டு பிறக்க இன்னும் 5 மாதங்களுக்கு குறைவான காலமே எஞ்சி இருக்கிறது. வரவிருக்கும் புத்தாண்டு, சர்வதேச சிறுதானிய ஆண்டு என்ற வகையிலே கொண்டாட இருக்கிறோம்'' என தெரிவித்து, நாட்டின் சிறுதானிய வரைபடம் ஒன்றை அனுப்பி உள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் இது குறித்து பேசுவீர்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார். நாட்டு மக்களின் இத்தகைய ஆர்வத்தை பார்க்கும் போது, எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை, 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். இந்தியாவின் இந்த முன்மொழிவினை 70 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரித்தன.
வேதங்களில்
இன்று உலகெங்கும் சிறுதானியங்கள் மீதான பேரார்வம் அதிகரித்து வருகிறது. சிறுதானியங்கள் என்பவை பண்டைய காலம்தொட்டே நமது விவசாயம், கலாசாரம், நாகரிகம் ஆகியவற்றின் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன. நமது வேதங்களிலும், புறுநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் கூட சிறுதானியங்கள் குறித்த குறிப்பு காணப்படுகிறது. தேசத்தின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு வகைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும். நம் கலாசாரத்தை போலவே, சிறுதானியங்களிலும் கூட பல வகைகள் காணக்கிடைக்கின்றன.
விவசாயிகளுக்கு பயன்
வரகு, சோளம், சாமை, ராகி , கம்பு, தினை, குதிரைவாலி போன்றவை சிறுதானியங்கள் இல்லையா. இந்தியா தான் சிறுதானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடு. ஆகையால், இந்த முயற்சியை வெற்றி பெற செய்ய பெரும் பொறுப்பு நமதுநாட்டு மக்கள் அனைவரின் தோள்களிலும் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். சிறுதானியங்கள் என்பன விவசாயிகளுக்கு அதிக லாபகரமானது. சிறிய விவசாயிகளுக்கு சிறப்பானது. மிகக்குறைந்த நேரத்தில் அறுவடைக்கு இவை தயாராகிவிடும் என்பதால், அதிக நீர் தேவைப்படாது. இதனால், சிறிய விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் பலனளிக்கும்.
ஏராளமான ஆதாயங்கள்
இன்றைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவு முறை தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அந்த வகையில், சிறுதானியங்களில் அதிகளவு புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியன நிறையன அளவில் உள்ளன. பலர் இதை சூப்பர் உணவு என்றும் கூறுகிறார்கள்
சிறுதானியங்களில் ஒன்றல்ல பல ஆதாயங்கள் உள்ளன. உடல் எடை, நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய் அபாயங்கள் ஆகியவற்றை குறைக்கிறது. வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களில் இருந்தும் காப்பாற்ற உதவுகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டோடு போராடவும் சிறுதானியங்கள் கணிசமான உதவி புரிகின்றன. இவை புரதங்களோடு கூடவே உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றன.
ஊக்கம்
நாட்டிலே சிறுதானியங்களுக்கு ஊக்கம் அளிக்க நிறைய விஷயங்கள் செய்யப்படுகின்றன. இவற்றோடு தொடர்புடைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு விவசாயிகள், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக விளைச்சலை அதிகரிக்க முடியும். விவசாயிகள் அதிகளவு சிறுதானியங்களை பயிர் செய்ய வேண்டும். இதனால் ஆதாயம் பெற வேண்டும். இன்று பல ஸ்டார்ட் அப்புகளும் கூட சிறுதானியங்கள் துறையில் பணிபுரிவதை காணும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
பண்டிகைகளுக்கான இந்த வேளையில் நாம் நமது பல தின்பண்டங்களிலும், சிறுதானிய வகைகளை பயன்படுத்துகிறோம். உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களின் படங்களை சமூக வலைதளங்களில் கண்டிப்பாக பகிருங்கள். மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.
டிஜிட்டல் இந்தியா
பெரிய நகரங்களில் மட்டும் கிடைத்த வசதிகள், டிஜிட்டல் இந்தியா மூலம் கிராமப்புறங்களிலும் கிடைக்கிறது. இதனால், ஏராளமான டிஜிட்டல் தொழில்முனைவோர்கள் உருவாகுகின்றனர். கிராமப்புற மக்கள் பல்வேறு தொழில் துவங்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.