வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹார் மாநிலத்தில் விசாரணை நடத்த சிபிஐக்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை நிதிஷ்குமார் அரசு ரத்து செய்தது.
பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து புதிதாக ஆட்சியமைத்தது. இதில் நிதிஷ்குமார் முதல்வராகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். ஆட்சி பொறுப்பேற்றப்பிறகு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.
சமீபத்தில் லாலு பிரசாத் யாதவ்விற்கு நெருக்கமான ஆர்ஜேடி கட்சி பிரமுகர்களின் இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், லாலு பிரசாத் குடும்பத்தினர் தொடர்புடைய வேலைவாய்ப்பு மோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

சிபிஐ சோதனைகள் நிதிஷ்குமார் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதனையடுத்து அம்மாநில அரசு இன்று (ஆக.,29) அதிரடி உத்தரவை வழங்கியது. அதாவது, பீஹாரில் விசாரணை நடத்த சிபிஐ.,க்கு தரப்பட்டிருந்த பொது அனுமதியை நிதிஷ்குமார் அரசு ரத்து செய்தது. இதனால், இனி அம்மாநில அரசின் அனுமதி அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி மட்டுமே விசாரணை, சோதனை நடவடிக்கைகளை சிபிஐ எடுக்க முடியும்.