வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், காவல் துறை தனித்தன்மையை இழக்க துவங்கி விட்டது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பண்டிகை நாள், திருமண நாள் என்று எந்த நாளாக இருப்பினும், மக்களை காக்கும் பணியில் தம்மை முழுதுமாக ஈடுபடுத்தி கொண்டுள்ள மக்கள் குறைதீர்ப்பாளர்கள், காவல் துறை நண்பர்கள்.சவாலான வழக்கை கையாளுவதிலும், மக்களிடையே அமைதி நிலவவும், தமிழக காவல் துறைக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், காவல் துறை தனித்தன்மையை இழக்க துவங்கி விட்டது. காவல் துறை கோபாலபுர குடும்பத்திற்கும், அமைச்சர்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை கையாளும் ஏவல் துறையாக மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.,வினர், காவல் துறையினரை தரம் தாழ்த்தி நடத்துகின்றனர்.
![]()
|
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களுக்காக, ஒரு ஆணையத்தை அமைத்தது. பின், சி.டி.செல்வத்தின் வாகனம் தாக்கப்பட்டது, சட்டம் - ஒழுங்கின் நிலைமையை வெட்ட வெளிச்சமாக்கியது.
பல மாதங்களாகியும், ஆணையம் எந்த ஒரு அறிக்கையையும், அரசுக்கு சமர்ப்பித்ததாக தெரியவில்லை. ஆணையத்தின் தற்போதைய நிலையை, மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்க, அரசு வழிவகை செய்ய வேண்டும்.
சாமானிய மக்களின் அரணாகவும், நாட்டின் சட்டத்தை தாங்கி பிடிக்கும் துாணாகவும் இருப்பது, காவல் துறை. அரசியல் குறுக்கீடு இன்றி, காவல் துறையினர் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமும், அரசின் கடமையும் ஆகும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.