வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கெஜ்ரிவால், முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒரு முறை கூட லோக் ஆயுக்தா, லோக்பாலை முற்றிலும் மறந்துவிட்டதாக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளதாவது: நீங்கள் முதல்வரான பிறகு நான் உங்களுக்கு முதல்முறையாக கடிதம் எழுதுகிறேன். அதற்கு காரணம், அண்மையில் வெளியான டில்லி மதுபான கொள்கை பற்றிய செய்திகள். டில்லி அரசிடம் இருந்து இப்படியொரு கொள்கையை நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல்வரான பிறகு, லோக்பால் லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள். சட்டசபையில், ஒரு முறை கூட லோக் ஆயுக்தாவை கொண்டு வர முயற்சி செய்யவில்லை. இப்போது, உங்களின் அரசு மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையை கொண்டு வந்துள்ளது. இது ஒன்றே போதும், உங்களின் வார்த்தைகளும், செயல்பாடுகளும் வெவ்வேறு என்பதை காட்ட.

மஹாராஷ்டிராவில், மதுபான கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது. ஆனால், இன்று டில்லி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்த முயன்று, அதனால் ஊழலில் சிக்கி உள்ளது. டில்லியில் மூலை முடுக்கு எல்லாம் மதுபான கடைகள் வந்துவிட்டன. ஒரு பேரியக்கத்தில் விளைந்த ஒரு கட்சிக்கு இதுவெல்லாம் அழகா. நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் ஹசாரே கூறியுள்ளார்.