லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க விரும்பும், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, அது தொடர்பாக பேச, புதுடில்லிக்கு துாது அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தில், பழனிசாமிக்கு ஆதரவான சூழல் உருவாகியுள்ளது. பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அக்கட்சி மேலிடத்திடம், பழனிசாமி மீண்டும் நெருக்கம் காட்ட விரும்புகிறார்.
![]()
|
அ.தி.மு.க., ஆட்சியின் போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் போன்றவர்களிடம், பழனிசாமி தரப்பினர் நெருக்கமாக இருந்தனர். அதே நெருக்கத்தையும், நட்பையும் மீண்டும் புதுப்பிக்கும் வகையில், பழனிசாமியின் துாதர்களாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர், புதுடில்லி
சென்றனர்.
இருவரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவரை சந்தித்து பேசியுள்ளனர்.இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. பன்னீர்செல்வம் அணி, கட்சி அமைப்பு ரீதியாக பலமாக இல்லை.பழனிசாமி அணியில் முழுக் கட்சியும் அடக்கம் என்ற தகவலை, பா.ஜ., மேலிடத்திடம், மத்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய அமைச்சரை பழனிசாமியின் துாதர்கள் சந்தித்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் -