வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவள்ளூர்: திமுக.,வின் 10 எம்எல்ஏ.,க்கள் அதிமுக.,வுடன் பேசி வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூரில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக எம்எல்ஏ.,க்கள் 10 பேர் எங்களிடம் சேர்வதற்காக பேசிக்கொண்டிருக்கின்றனர். திமுக ஒரு குடும்பக்கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதி எம்எல்ஏ.,வாக மட்டுமே உள்ளார். ஆனால் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டத்தை துவங்கி வைக்கிறார். அதிமுக தொண்டர்களால் ஆளும் கட்சி. அதிமுக அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு போனது குறித்த புகார் தொடர்பான விசாரணை காலம் தாழ்ந்தது.
போலீசார் தடயங்களை சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அது நடக்காது. இந்த ஆட்சியில் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் கிடையாது, திருட்டு போன ஆவணங்களை கண்டுபிடிக்கும் போலீசாரும் கிடையாது, அதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கும் முதல்வரும் தமிழகத்தில் இல்லை. நீதிமன்றத்திற்கு சென்றபிறகு தான் சிபிசிஐடி விசாரணையே நடைபெறுகிறது. பிரதான எதிர்க்கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டதாக புகார் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காதது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக உள்ளதற்கு இதுவே சான்று.

அலுவலகம் செல்லும் இபிஎஸ்
முன்னதாக அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், 'நாளை (செப்.,8) காலை 10 மணியளவில் பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகம் வருகை தந்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.