சென்னை: அதிமுக.,வின் 50 எம்எல்ஏ.,க்கள், 2 எம்.பி.,க்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ.,க்கள் 10 பேர் அதிமுக.,வில் சேர்வதற்காக பேசிக்கொண்டிருக்கின்றனர் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அவர் கூறியுள்ள தகவல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: அதிமுக.,வின் 50 எம்எல்ஏ.,க்கள், 2 எம்.பி.,க்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருக்கின்றனர்.
அதிமுக.,விடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ.,க்களின் பட்டியலை பழனிசாமி வெளியிட்டால் நானும் பட்டியலை வெளியிடுகிறேன். உண்மையான திராவிட இயக்கம் திமுக தான். அதிமுகவில் இருந்து பலபேர் எங்களுடன் வந்துள்ளனர்; இதனை யாரும் மறுக்க முடியாது. எனவே, அதிமுக.,வினர் திமுக.,வில் இணைய வேண்டும். ராகுலின் யாத்திரை என்பது பா.ஜ.,வுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. கடந்த தேர்தலில் 37 சதவீத ஓட்டுகள் வாங்கிதான் மோடி பிரதமரானார். அதாவது 63 சதவீத ஓட்டுகள் மோடிக்கு எதிர்ப்பாக வந்துள்ளது.
இத்தகைய 63 சதவீத ஓட்டுகளையும் ஒன்றாக திரட்டும் பணியில் தான் முதல்வர் ஸ்டாலின், ராகுல் ஈடுபட்டுள்ளனர். இந்த யாத்திரை என்பது 2024ல் மிகப்பெரிய மாற்றத்தை மத்தியில் உருவாக்கும். அடுத்த பார்லி தேர்தலில் திமுக.,வின் பங்கு நிச்சயமாக பெரியளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.