புதுடில்லி: நமீபியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிகளை தனது பிறந்த நாளில் பிரதமர் மோடி மத்திய பிரதேச காட்டுக்குள் திறந்து விட்டார்.

1948ல் இந்தியாவின் கடைசி சிவிங்கி இறந்தது. அதன்பிறகு நாட்டில் சிவிங்கி இனம் அழிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிவிங்கி இனத்தை பெருக்கும் நோக்கில் நமீபியா நாட்டில் இருந்து 8 சிவிங்கிகள் இந்தியா வந்தடைந்தன.

இந்நிலையில், தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் இந்தாண்டு ஜூலை 20ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நமீபியா அரசு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என எட்டு சிவிங்கிகளை நம் நாட்டுக்கு நன்கொடையாக வழங்குகிறது. இந்த சிவிங்கிகள், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படுகிறன. இதற்காக, நமீபியா சென்றடைந்த தேசிய விலங்கான புலி வடிவில் டிசைன் செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் வந்த சிவிங்கிகள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு, இன்று (செப்., 17ம் தேதி) காலை அந்த வந்தடைந்தது.

அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக, இந்த சிவிங்கிகள் மத்திய பிரதேசத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று (17ம் தேதி) , இந்த சிவிங்கிகளை, குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார்.

சிவிங்கிகள் வந்தது வரலாற்று சிறப்பு மிக்கது: மோடி
காட்டுக்குள் சிவிங்கிகளை கூண்டில் இருந்து வெளியே திறந்து விட்ட பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்: இந்தியாவுக்கு சிவிங்கிகள் தந்த நமீபியா நாட்டிற்கு நன்றி. தற்போது இந்தியா வந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்கதாகும். காட்டு வளத்தை இது அதிகரிக்க செய்யும். பல ஆண்டுகளுக்கு முன்னதாக அழிந்து போன இந்த இனம் மீண்டும் இந்திய மண்ணுக்கு திரும்பி வந்துள்ளது. இந்த சிவிங்கிகளை நமது சுற்றுலா பயணிகள் பார்வையிட சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.