சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்தே, ஐ.நா.,வில் இலங்கையை இந்தியா கண்டித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பை ஒருபோதும் ஆதரிக்காத, பா.ஜ., ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பதை வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், 12-ம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐ.நா., மனித உரிமை பேரவை கூட்டத்தில் பேசிய இந்திய துாதர், 'ஈழத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதற்காக, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரம், மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், எந்த முன்னேற்றத்தையும் இலங்கை அரசு எட்டவில்லை' என்று குற்றம் சாட்டினார்.
மேலும், ஐ.நா., கூட்டத்தில், 'ஒருங்கிணைந்த இலங்கைக்குள், தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதே, இந்தியாவின் நிலைப்பாடு. இதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்' என்று, கண்டிப்புடன் இந்திய துாதர் பேசியுள்ளார்.மத்திய பா.ஜ., அரசின் இந்த கண்டிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
![]()
|
இலங்கையை சீனா ஆதரிப்பதால் தான், இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும், ஐ.நா.,வில் மத்திய அரசின் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன.கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, இலங்கை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, மே 1-ல் நுவரெலியாவில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடத்திய உழைப்பாளர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 'ராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது போல, நானும், என் ரத்தத்தின் ரத்தமான இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன். இன்றைய இந்தியா மோடியின் வல்லரசு இந்தியா. இலங்கை மக்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது. உங்களின் துயரங்கள் அனைத்தும் விரைவில் விடுபடும்' என்றார். இலங்கை பயணம் குறித்த விரிவான அறிக்கையை, அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் அண்ணாமலை அளித்திருந்தார்.இந்நிலையில், ஐ.நா., மனித பேரவையில் இலங்கை பற்றிய விவாதம் நடப்பதையொட்டி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசிக்குமாறு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூறியுள்ளனர்.
அதன்படி, தன்னிடம் ஆலோசித்த ஜெய்சங்கரிடம் அண்ணாமலை, 'விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாத நிலையில், நாம் முழுமையாக தமிழர்கள் பக்கம் நிற்பது தான் சரியானது. இலங்கை தமிழர்கள் மோடியை தான் நம்பியுள்ளனர். 'எனவே, 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தி அரசியல் அதிகாரம் வழங்குதல் போன்ற அடிப்படையான கோரிக்கைகளை, இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இதைத் தான் தமிழக மக்களும் விரும்புகின்றனர்' என கூறியுள்ளார்.அதைத் தொடர்ந்தே, ஐ.நா., மனித உரிமை பேரவை கூட்டத்தில், 'கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை' என கண்டித்ததுடன், 'இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், சமநீதி, சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்' என இந்தியா வலியுறுத்தியுள்ளது.