அன்னூர்: அன்னூர் அரசு மருத்துவமனையில் கடந்த 9 ம் தேதி அனுமதிக்கப்பட்ட கர்ப்பணிக்கு பிரசவத்தின் போது மின் தடை ஏற்பட்டது. இதனால் உடல்நிலை மோசமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று(செப்.,24) காலை உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் அன்னுார் அருகே ஊத்துப்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மனைவி வான்மதி, 23. நிறைமாத கர்ப்பிணியான வான்மதி, கடந்த 9ம் தேதி அன்னுார் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். 21ம் தேதி காலை வான்மதிக்கு சிசேரியன் பிரசவம் செய்யும் போது, மின் தடை ஏற்பட்டது; ஜெனரேட்டரும் இயங்கவில்லை. இதனால், பிரசவத்தின் போது வான்மதிக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனை டாக்டர்கள், வான்மதியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வான்மதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. வான்மதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் கோவில்பாளையம் அருகே தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் வான்மதியின் உடல்நிலை மோசமாகி இன்று காலை 6:30 மணிக்கு இறந்தார்.
இது குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் இயங்காததால் வான்மதிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் இறந்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து, அன்னூரில் குமாரபாளையம் ஊத்துப்பாளையம் பகுதி மக்கள் இறந்த வான்மதியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இறப்புக்கு காரணமான இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போலீசார் குவிக்கப்பட்டனர்.