குமாரபாளையத்தில் மின் கட்டண உயர்வு கண்டித்து நடக்கவிருந்த, விசைத்தறி வேலை நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
குமாரபாளையம் கொங்கு பவர்லுாம்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், சங்கத்தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குமாரபாளையத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்து, செப்., 27ம் தேதி முதல், கொங்கு விசைத்தறிகள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் செய்வதாக இருந்தது ஒத்தி வைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சங்கத்தலைவர் சங்கமேஸ்வரன் கூறியதாவது:
கோவை மாவட்ட விசைத்தறி சங்கத்தினர் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேட்டுக்கொண்டனர். அதற்கு விசைத்தறி சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பொறுத்திருங்கள், முதல்வரிடம் பேசி நல்லதொரு பதிலை சொல்கிறேன் என மின்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அதேபோல் அரசு கேட்டுக் கொண்டதால், நாங்களும் மின் கட்டண உயர்வை கண்டித்து, 27ல் தொடங்கவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம். எங்களுடன் கொங்கு மண்டல முறுக்கு நுால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.