மயிலாடுதுறை:மீன் பிடிக்க சென்ற போது எஞ்சின் பழுது அடைந்ததால் காற்றின் வேகத்தில் திசை மாறிய விசைப்படகு மற்றும் 12 பூம்புகார் மீனவர்களை இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி பூம்புகார் விஜயரங்கன் மகன் ஜெயச்சந்திரன்.38. என்பவருக்கு சொந்தமான பைரவகாளி என்ற பெயருடைய விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார்.25, அஞ்சப்பன்.45, தமிழ்ச்செல்வன்.45, நிலவரசன்.25, கண்ணன்.40, மாசிலாமணி.65, பிரகாஷ், மற்றும் மடத்துகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேல்.35, சங்கர்.40, திருமுல்லை வாசலை சேர்ந்த கார்த்திக்.23, தரங்கம்பாடியைச் சேர்ந்த மாசிலாமணி.65, தேவேந்திரன்.23. உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஜெயச்சந்திரனின் விசைப்படகு எஞ்சின் பழுதடைந்துள்ளது. இதனை அடுத்து தகவல் தெரிவிப்பதற்காக அந்த படகில் இருந்து நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் கடற்கரை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் பழுதடைந்த பூம்புகார் விசைப்படகு மற்றும் மீனவர்களை தேடினர். குறிப்பிட்ட இடத்தில் படகு இல்லை. விசைப்படகு மற்றும் அதிலிருந்து மீனவர்கள் காற்றின் வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுவதால் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழுதடைந்த விசைப்படகு மற்றும் மீனவர்களை தேடுவதற்காக பூம்புகாரில் இருந்து எட்டு பேர் கொண்ட மீனவர் குழுவினர் விசைப்படகு ஒன்றில் கடலுக்குள் செல்கின்றனர்