சென்னை:இலங்கை கடற்படை கைது செய்து விடுவித்த, தமிழக மீனவர்கள் ஆறு பேர், நேற்று சென்னை வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆறு பேர், ஆக., 26ல் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.அவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. அதையடுத்து, மீனவர்கள் ஆறு பேரையும், இலங்கை நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் விடுதலை செய்தது.இந்நிலையில், அவர்கள் 'ஏர் இந்தியா' விமானம் வாயிலாக, நேற்று சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். பாஸ்போர்ட் இல்லாததால், அவசர சான்றிதழ் வாயிலாக, அனைவரும் சென்னை திரும்பினர்.