அரும்பாக்கம் :சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்ட, சிற்றுந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது அமைந்தகரை, சூளைமேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் 'மினி பஸ்' என்கிற சிற்றுந்து இயக்கப்பட்டது. பின், 2018ல் இருந்து வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு வழித்தடங்களில், சிற்றுந்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக அமைந்தகரை, சூளைமேடு, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட சிற்றுந்து நிறுத்தப்பட்டதால், ஏராளமானோர் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:கோடம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட பகுதியில், தடம் எண்கள்: 30, 31 மற்றும் 32 சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. இதில், நாளொன்று, 500க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.குறிப்பாக கோடம்பாக்கம், வடபழநி, சூளைமேடு பகுதிகளில் வசிப்போர், அண்ணா நகர், அமைந்தகரை, வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, அண்ணா நெடும்பாதை வழியாக, நெல்சன் மாணிக்க சாலைக்கு சென்று மாநகர பேருந்தில் செல்ல வேண்டும்.
சிற்றுந்து இயக்கப்பட்டதால் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் பயணியருக்கு வசதியாக இருந்தது.தற்போது, பல ஆண்டுகளாக இவ்வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படாததால், 2 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டிய நிலைய உள்ளது.கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்லும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மீண்டும் சிற்றுந்தை இயக்க அரசு முன்வரவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.