வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்த ஆண்டு, தமிழகம் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் முதலிடத்தையும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், 'இந்திய சுற்றுலா புள்ளி விபரம் - 2022' என்ற 280 பக்க அறிக்கையை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் 15 கோடி பேரை ஈர்த்து, தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடம் பிடித்த உத்தர பிரதேசத்துக்கு ஒன்பது கோடி சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்.

இதேபோல், வெளிநாட்டு சுற்றுலா பயணியரை அதிகளவில் ஈர்த்ததில் 12.6 லட்சம் பேருடன் மஹாராஷ்டிரா முதலிடமும், 12.3 லட்சம் பேருடன் தமிழகம் இரண்டாம் இடமும் வகிக்கின்றன. உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, 2021 - 2022ல் உள்நாட்டு சுற்றுலா பயணியர் 30 லட்சம் பேரும், வெளிநாட்டு பயணியர் 38 ஆயிரம் பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.
அதேநேரத்தில், தமிழகத்தின் மாமல்லபுரத்தை, வெளிநாட்டு பயணியர் அதிகம் பேர் ரசித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 1.4 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். உள்நாட்டு பயணியரின் விருப்பத்தில் புதுடில்லியில் உள்ள செங்கோட்டை, குதுப்மினார் ஆகியவையும் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் 3,693 பாரம்பரிய இடங்கள், தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.